முகவுரை

இறைவனே நமக்கு அருள்புரிந்த சமயம் சைவ சமயம். சைவ சமயம் அநாதியானது. சைவ சமயம் உலகெங்கும் பரவி இருந்தது. இறைவன் ஒருவனே என்ற தெளிவான கோட்பாடுகளை உரக்க எடுத்துக் கூறியது சைவ சமயம். (அனைத்து இந்து சமயங்களும்). முழுமுதற் கடவுளான சிவபெருமான் இந்த பூமியும் பேரண்டமும் என்று உண்டோ, அன்றிலிருந்து பெருங்கருணை கொண்டு உயிர்களுக்குத் தன் அருளைப் பொழிந்து வருகிறார். சைவ சமய தத்துவங்களும் கடவுள் கொள்களைகளும் மிகவும் நுட்பமானவையும் மிக உயர்ந்தவையும் ஆகும். இது இறைவனின் தன்மைகளை தெளிவாகக் காட்டுவதாக அமைகிறது. ஆகையால் தான், இவ்வுலகில் பல்லாயிரம் சமயங்கள் தோன்றினாலும், அச் சமயங்களில் உண்மை இல்லாமையினால் அவை மறைந்து அழிந்து போயின. இன்று உலகமயமாக்கல் காரணமாக, உலகின் இரு சமயங்களான கிறிஸ்தவமும் இசுலாமும் வெறும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு, அரசியல் மத அரசியல் காரணங்களுக்காக, பாரத கண்டத்திலும் பரப்பப்பட்டு வருகிறது. இவைகளுக்கு கடவுள் என்று எந்த தத்துவமும், கொள்கைகளும், கோட்பாடுகளும், சிந்தாந்தமும் கிடையாது. ஆனால், அந்த பரம்பொருளான சிவபெருமானே நமக்கு அருள் செய்து, சமய உண்மைகளை அநாதி காலத்திருந்தே நமக்கு நேரடியாகவே உணர்த்தியிருப்பதால் சைவ சமயம் அநாதியான காலத்திருந்தே இருக்கிறது. சிவபெருமானின் திருவருளினால், அவன் அருளைப் பெற்ற மனிதர்கள் மட்டுமே சைவ சமயத்தை அறிய முடியும். அதைப் பின்பற்றவும் முடியும். மற்றவர்களால் நெருங்கக்கூட முடியாது. சைவ சமயிகளுக்கு இப்பிறப்பு முழுவதும் பேரின்பமும், இறுதியில் திருவடிப்பேறும் கிட்டும். சைவ சமய தத்துவங்களை வேதங்களும், ஆகமங்களும், பன்னிரு திருமுறைகளும் 14 சாத்திர நூல்களும், பதினென் சித்தர்களும் விளக்குகிறார்கள். இவை அனைத்தும் படிக்க படிக்க சிவானுபவ இன்பம் தந்து நம்மை சிவபெருமானுக்கு அருகில் இட்டுச் செல்பவை. இவையெல்லாம் படிக்க ஒரு பிறவி போதாது. இருப்பினும் அவனருளால், சிவஞானம் கிட்டி அதுவும் கைகூடும். நாம் முயற்சி செய்வோம். திருச்சிற்றம்பலம். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

செவ்வாய், 22 டிசம்பர், 2015

மாகேசுர பூசை என்றால் என்ன ?



சிவமயம்
மாகேசுர பூசை என்றால் என்ன ?

மாகேசுர பூசை - பெயர் விளக்கம்
 
ஈஸ்வரன் என்றால் உடையவன் என்று பொருள். முடிவில்லாத மகா அண்டத்தை உடையவனை மகேஸ்வரன் என்கிறோம். மகேஸ்வரனுக்கு செய்யும் பூசை மகேஸ்வர பூசை. ஆதியும் அந்தமும் அற்ற அந்த மகேஸ்வரனோ, அவனுடைய தொண்டர்களின் உள்ளத்துள் ஒடுக்கம் என்கிறார் ஔவையார். இந்த தொண்டர்கள் மாகேசுரர் எனப்படுவர். அத்தகைய பெருமை உடைய மாகேசுரர்களுக்கு செய்யும் பூசை மாகேசுர பூசை.

மாகேசுர பூசையின் பெருமை
 
புண்ணியங்களுள் சிறந்தது சிவபுண்ணியமாகும். அந்த சிவபுண்ணியத்துள்ளும் சிவபூசை மிகவும் சிறந்ததாகும். அந்த சிவபூசையிலும் சிறந்தது மாகேசுர பூசை.

மாகேசுர பூசை எப்படி செய்யப்படுகிறது ?
 
மாகேசுர பூசையாவது, மாகேசுரர்களை விதிப்படி பூசித்து அவர்களுக்கு அன்னம் ஊட்டுதலாகும். மாகேசுரர்களை தூரத்தே கண்டவுன், அவர்களது சாதி, குலத்தை ஆராயாமல், ஏழை செல்வந்தர் என்றும் பாராமல், திருநீறும், கண்டமணியும் அணிந்திருக்கும் அந்த அடியவர்களை, மனிதர் என்றும் எண்ணாமல், சிவபெருமானே வந்திருப்பதாக எண்ணி உபசரிக்க வேண்டும். சிவவேடமே சிவனாக கொள்ளவேண்டும். சிவனின் மீது இருக்கும் அன்பினாலும், அவன் அடியவர்களின் மீது இருக்கும் அன்பினாலும், தம் இருப்பிடத்தை விட்டு எழுந்து, அகமகிழ்வோடும் முகமலர்ச்சியோடும், தம் கைகளைக் குவித்து அவர்களை எதிர்கொள்ள வேண்டும். அவர்கள் அருகில் சென்றபின், அவர்களின் திருவடிகளில் விழுந்து வணங்கி, இனிமையான சொற்களைப் பேசி வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களை வசதியான இடத்தில் அமரச் செய்து, பூசை செய்ய உகந்த கரகநீரைக் கொண்டு அவர்களின் திருவடிகளை விளக்க வேண்டும். அந்த நீரை தீர்த்தமாக எண்ணி, நம் தலையில் தெளித்து, உள்ளும் பருக வேண்டும். பின்னர், மெல்லிய சுத்தமான ஆடையினால் அவர்களின் திருவடிகளை ஒற்றி உலர்த்த வேண்டும். பின்னர் அவர்களை பூசை செய்வதற்கு உகந்த மலர்களால் பூசித்து, தூபதீபம் காட்டி, பூமியில் விழுந்து நமஸ்காரம் செய்ய வேண்டும். கைப்பு, புளிப்பு, தித்திப்பு, துவர்ப்பு, கார்ப்பு, மற்றும் உவர்ப்பு என்னும் அறுவகைச் சுவையை உடைய உணவை, உண்ணப்படுவது, தின்னப்படுவது, நக்கப்படுவது, பருகப்படுவது என நால்வகைப்படும் உணவுகளை, அவரவர் வசதிப்படி அமுது செய்விக்க வேண்டும். நான் மனித பிறவி பெற்ற பயனை இன்றல்லவோ பெற்றேன் என்று அவர்களிடம் மனமகிழ்வோடு கூற வேண்டும்.  சிவதருமோத்தரம், "புலையரே யெனினுமீசன் பொலன்கழ லடியிற் புந்தி - நிலையரே லவர்க்குப் பூசை நிகழ்த்துத தாளி னேச - மிலரெனி லியற்றும் பூசைப் பலந்தரு வாரே யாரே." அவர்கள் விடைபெற்று போகும் போது, அவர்களோடு கூடவே பதினான்கு அடி சென்று வழியேற்றிவிட வேண்டும்.
 
இத்தனை பெரும் சிறப்பு பெற்றது மாகேசுர பூசை. இந்த மாகேசுர பூசையை தினம் தோறும் தவறாது, சைவ ஆகம விதிப்படி, உண்மையான உள்ள அன்போடு செய்து சிறப்புப் பெற்றவர் இளையான்குடிமாற நாயனார். தினமும் மாகேசுர பூசை செய்ததினாலே, தன்னுடைய எல்லையில்லாத பெருஞ்செல்வம் குறைந்து வறுமையில் வாடிய போதும், இவர்புண்ணியம் செய்த நமக்கு கடவுள் இவ்வளவு இடர் செய்கிறாரேஎன்று சிவனை  சிறிதும் நோகாமல் தொடர்ந்து மாகேசுர பூசை செய்து வரலானார். இவர்களின் மேலான தவத்தை உலகறிய செய்யவே, பரமசிவனார் இவர்கட்கு வறுமை அருளினார். பின்னர் இவர்கட்கு பேரின்ப வாழ்வைக் கொடுத்தருளிய பெருங்கருணையாளன் சிவபெருமான்.
உருத்திராக்கங்களை பல்வேறு அபிசேடங்கள் செய்து அதை இறைவனுக்கு ஆவாகனம் செய்யும் போது, சிவபெருமானே அதை ஏற்றுக்கொண்டு தன் அருளை வழங்குகிறார்


அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே.




உழவாரப் பணியின் மகிமை அறிவோம். நாமும் திருப்பணி செய்வோம்.



சிவமயம்

உழவாரப் பணியின் மகிமை அறிவோம். திருப்பணி செய்வோம்

ஓர் ஊரில், வட்டிக்கு பணம் கொடுத்தும், அநியாய வட்டி வசூலித்தும், வட்டி தராதவர்களை அவமானப்படுத்தியும் ஒரு செல்வந்தன் வாழ்ந்து வந்தான். இதனால், அவன் பலரின் சாபத்திற்கு ஆளானான். கோவிலுக்கு அவன் அடிக்கடி சென்று வந்தாலும், அவனுக்கு அவன் செல்வத்தின் காரணமாக மதிப்பும் மரியாதையும் கிடைத்தது.  இந்நிலையில் கர்ப்பமுற்றிருந்த அவன் மனைவிக்கு குழந்தை பிறக்கும் தருணம் வந்தது. மனைவிக்குப் பிரசவ வலி வந்த செய்தியைக் கேட்டு, கடையிலிருந்து வீடு நோக்கி சென்றான். செல்லும் வழியில் சிவாலயம் ஒன்று குடமுழுக்கிற்காக திருப்பணி நடந்து கொண்டிருந்தது. சிலர் கோவிலை பெருக்கி சுத்தம் செய்தனர். சிலர் தோரணம் கட்டினர். சிலர் விளக்குகள் அமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏணியில் நின்றபடி மதில் சுவற்றுக்கு ஒருவர் வெள்ளையடித்துக் கொண்டிருந்தார். அவரது சுண்ணாம்பு மட்டை கீழே விழுந்து விட, அவ்வழியாக சென்ற செல்வந்தரைப் பார்த்து, ஐயா தர்மப்பிரபு தயவு கூர்ந்து அந்த மட்டையை எடுத்துக் கொடுங்களேன் என்று கேட்க, தர்மப்பிரபு என்ற வார்த்தையில் மயங்கியவன், மட்டையை எடுத்து ஏணியில் சிறிது படிகள் ஏறி அந்த மட்டையை கொடுத்துவிட்டு சென்றான்.
இவன் செய்த பாவங்களின் பலனாக, இவன் குழந்தை பிறக்கும் தருவாயில் இறந்து போய், இவனுக்கு குலம் தழைக்காது போவதே விதியாக இருந்தது. எம தூதர்கள் இவன் இல்லம் அடைந்து பாசக்கயிற்றை வீச தயாரானார்கள். திடீரென்று சிவலோகத்திலிருந்து இரு பூதகணங்கள் தோன்றி, எமதூதர்களை தடுத்தனர். குடமுழுக்கிற்காக தயாராகும் சிவாலயத்தில், அடியவர் ஒருவருக்கு இவர் சிறு உதவி செய்த காரணத்தால், அந்த புண்ணியத்தில் லட்சத்தில் ஒரு பங்கு இவருக்கு சேர்ந்துவிட்டது. ஆகவே, இவரது குழந்தையின் உயிரை கவரக்கூடாது என்பது ஈசனின் ஆணை என்றனர். மேலும் சுகப்பிரசவத்திற்கு வேண்டியவற்றை செய்ய எம்பெருமான் கட்டளையிட்டுள்ளார். ஆகவே திரும்பி செல்லுங்கள் என்று எமதூதர்களை திருப்பி அனுப்பி விட்டனர் சிவகணங்கள். தன் குழந்தைக்கு நிகழவிருந்த ஆபத்தையும், தன் உதவியினால் அது விலகியதையும் ஜோதிடர் மூலம் அறிந்து கொண்ட செல்வந்தன் திருந்தி கோவில்களுக்கு திருப்பணிகள் செய்து வரலானான். கோவிலை சுண்ணம் அடித்து கொண்டிருந்தவர்களுக்கு மட்டையை எடுத்து கொடுத்ததற்கே இவன் இப்பலனை அடைந்தால், அவன் ஆலயத்தில் உழவாரப்பணி செய்பவர்களுக்கு எத்தகைய புண்ணியம் கிடைக்கும் என்பதை பாருங்கள். ஆனால், நாம் இந்த உழவாரத் திருப்பணியை, கிடைக்க போகும் புண்ணியத்திற்காக அல்ல, அவன் மீது வைத்திருக்கும் எல்லையற்ற அன்பினால் செய்ய வேண்டும்.
கருணையே உருவான இறைவன் இவ்வுடம்பு, நல்ல மனம், புத்தி, சித்தி, அகங்காரம், உலகம், கணவன், மனைவி, மக்கள், பெற்றோர், வீடு, வாசல், பொன், பொருள் என்று நாம் கேட்காமலேயே நமக்கு அருளியிருக்கிறார். இதற்காக நாம் அவரிடத்தில் மிகுந்த அன்பு கொண்டு தொண்டு புரியவேண்டும். இறைவனை உணர்ந்து, அவரோடு உறவை ஏற்படுத்தி, பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளாக, சைவ சமயம் சீலம், நோன்பு, செறிவு, அறிவு (சரியை, கிரியை, யோகம், ஞானம்) என்று நான்கு வழிகளை குறிப்பிடுகிறது. நம் தாய் தந்தை சகோதரர்களிடம் அன்பு செலுத்துவதைப் போல, இறைவனிடமும் ஆழ்ந்த அன்பு செலுத்தவேண்டும். அந்த அன்பை நாம் மேற்கூறிய வழிகளில் வெளிப்படுத்தலாம். இதில் மிகவும் எளிதானது சீலம் என்ற இறைத் தொண்டு புரிவதே. இறைவன் உறையும் வீடாகிய திருக்கோவில்களில் நீரும், பூவும், பாமாலையும் சாற்றி வழிபடுதல், கோவில்களை தூய்மை செய்தல், அலங்கரித்தல், கோலமிடுதல், விளக்கேற்றுதல், பூச்செடிகள் நட்டு வளர்த்தல், மலர் பறித்தல், திருமுறைகளை ஓதுதல், எழுதுதல், மாலை கட்டுதல், நீர் சுமந்து கொடுத்தல், பூந்தோட்டம் அமைத்தல், குளம் அமைத்து கொடுத்தல், சந்தனம் அரைத்தல், கோவில் திருவுருவங்களை துலக்குதல், ஊதுபத்தி ஏற்றுதல், திருப்பணிகளுக்கு நிதியுதவி செய்தல், பல்லக்கு சுமத்தல், வடம் பிடித்தல், தீவட்டி ஏந்துதல், பழமையான கோவில்களை புதுப்பித்தல், பூசை பொருட்கள் வாங்கித் தருதல், பூசை செலவுகளை ஏற்றல், அன்னதானம் வழங்குதல், பரிமாற உதவிடல், திருநீறு அணிதல், கண்டமணி (உருத்திராக்கம்) அணிதல், சிவநாமம் சொல்லல், பிறரையும் இத்தொண்டு செய்ய ஊக்குவித்தல் போன்று எண்ணற்ற தொண்டுகளை புரிந்து வரலாம். ஏதாவது ஒரு குறிப்பிட்ட தொண்டை தொடர்ந்து வழுவாமல் செய்து வருவது சிறப்பு. இன்றைய தினங்களில் மாதம் ஒரு முறை அல்லது இருமுறை ஏதாவது ஒரு சிவாயத்திற்கு சென்று உழவாரப் பணி மேற்கொள்ளலாம். 200 அல்லது 300 பேர் கொண்ட பெரிய குழுவாக இணைந்து செய்தால் எத்தகைய பணியினையும் விரைந்து செய்ய இயலும். பழைய கோவில்களை ஆகம விதிப்படி புதுப்பித்தலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். 63 நாயன்மார்கள் யாவரும் இது போன்ற தொண்டுகளை வழுவாமல் பற்றி செய்து வந்தவர்களே. நாயன்மார்களின் வரலாற்றை அறிந்து யாவருக்கும் உரைப்பதும் ஒரு தொண்டு. உழவாரப்பணி என்றாலே நம் நினைவுக்கு வருவது உழவாரப் படை ஏந்திய திருநாவுக்கரசர் பெருமான். சமண சமயத்தால் பூசையின்றி இருந்த சிவாயலங்களுக்கு உழவாரப் பணி செய்தார். இவருக்கு உழவாரப் பணி செய்ய வேண்டுகோள் விடுத்து முன்னோடியாக இருந்தவர் இவர் சகோதரி திலகவதியார். இவர்கள் வரலாற்றை அறிவோம். 

இறைவனுக்கு செய்யும் தொண்டினால் வரும் மனநிறைவு பேரின்பம். இந்த பேரின்பத்தை அனுபவித்தவரிடம் கேட்டு பாருங்கள். இந்த தொண்டு இறைவனோடு உங்களைப் பிணைக்கும் மிக வலுவான பாலமாக அமையும். இந்த தொண்டிற்கு ஈடு இணை இவ்வுலகில் ஏதுமில்லை. பலனை எதிர்பாராமல், உள்ளன்போடு செய்யும் தொண்டினை ஏற்கும் இறைவன், உங்களை ஒரு குறையும் வராமல், நல்வழியில் நடத்தி செல்வார். என் கடன் பணி செய்து கிடப்பதே. மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம். திருச்சிற்றம்பலம்.             
படைப்பு:: சிவமீனா