முகவுரை

இறைவனே நமக்கு அருள்புரிந்த சமயம் சைவ சமயம். சைவ சமயம் அநாதியானது. சைவ சமயம் உலகெங்கும் பரவி இருந்தது. இறைவன் ஒருவனே என்ற தெளிவான கோட்பாடுகளை உரக்க எடுத்துக் கூறியது சைவ சமயம். (அனைத்து இந்து சமயங்களும்). முழுமுதற் கடவுளான சிவபெருமான் இந்த பூமியும் பேரண்டமும் என்று உண்டோ, அன்றிலிருந்து பெருங்கருணை கொண்டு உயிர்களுக்குத் தன் அருளைப் பொழிந்து வருகிறார். சைவ சமய தத்துவங்களும் கடவுள் கொள்களைகளும் மிகவும் நுட்பமானவையும் மிக உயர்ந்தவையும் ஆகும். இது இறைவனின் தன்மைகளை தெளிவாகக் காட்டுவதாக அமைகிறது. ஆகையால் தான், இவ்வுலகில் பல்லாயிரம் சமயங்கள் தோன்றினாலும், அச் சமயங்களில் உண்மை இல்லாமையினால் அவை மறைந்து அழிந்து போயின. இன்று உலகமயமாக்கல் காரணமாக, உலகின் இரு சமயங்களான கிறிஸ்தவமும் இசுலாமும் வெறும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு, அரசியல் மத அரசியல் காரணங்களுக்காக, பாரத கண்டத்திலும் பரப்பப்பட்டு வருகிறது. இவைகளுக்கு கடவுள் என்று எந்த தத்துவமும், கொள்கைகளும், கோட்பாடுகளும், சிந்தாந்தமும் கிடையாது. ஆனால், அந்த பரம்பொருளான சிவபெருமானே நமக்கு அருள் செய்து, சமய உண்மைகளை அநாதி காலத்திருந்தே நமக்கு நேரடியாகவே உணர்த்தியிருப்பதால் சைவ சமயம் அநாதியான காலத்திருந்தே இருக்கிறது. சிவபெருமானின் திருவருளினால், அவன் அருளைப் பெற்ற மனிதர்கள் மட்டுமே சைவ சமயத்தை அறிய முடியும். அதைப் பின்பற்றவும் முடியும். மற்றவர்களால் நெருங்கக்கூட முடியாது. சைவ சமயிகளுக்கு இப்பிறப்பு முழுவதும் பேரின்பமும், இறுதியில் திருவடிப்பேறும் கிட்டும். சைவ சமய தத்துவங்களை வேதங்களும், ஆகமங்களும், பன்னிரு திருமுறைகளும் 14 சாத்திர நூல்களும், பதினென் சித்தர்களும் விளக்குகிறார்கள். இவை அனைத்தும் படிக்க படிக்க சிவானுபவ இன்பம் தந்து நம்மை சிவபெருமானுக்கு அருகில் இட்டுச் செல்பவை. இவையெல்லாம் படிக்க ஒரு பிறவி போதாது. இருப்பினும் அவனருளால், சிவஞானம் கிட்டி அதுவும் கைகூடும். நாம் முயற்சி செய்வோம். திருச்சிற்றம்பலம். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

திங்கள், 28 மார்ச், 2016

சைவ பெற்றோர்கள் செய்ய வேண்டியது யாது ? RIP ? சித்திரசபை

whatsapp shaiva shiva siva pastable news. வாட்சேப்பில் பதிவு செய்யக்கூடிய நகல் செய்து ஒட்டக்கூடிய சிவ சைவ செய்திகள் 5 
திருச்சிற்றம்பலம்.

சைவ பெற்றோர்கள் செய்ய வேண்டியது யாது ?

சைவ பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இளம் பருவத்திலிருந்தே இறைவனை அடையாளம் காட்டி, அவன் மீது அன்பு வைத்திருக்கும் அவசியத்தையும், நம் சமயத்தின் ஆணி வேரை விதைக்கும் முக்கிய கடமையையும் செய்ய வேண்டும்.

1. குழந்தைகளை வாரம் ஒரு முறை தவறாமல் கோவிலுக்கு கூட்டிச் செல்ல வேண்டும். முடிந்தவர்கள் தினமும் கூட்டிச் செல்லலாம். கோவிலில் நாம் கும்பிடும் முறைகள், ஏன் எதற்கு செய்கிறோம் என்பதை அவர்கட்கு புரியும் வகையில் கட்டாயம் சொல்லித் தர வேண்டும். அவர்களின் வினாக்களுக்கு தகுந்த விடையளிக்க வேண்டும். (அதற்கு முன்னர், அந்த கேள்விகளுக்கு நமக்கு சரியான விடை தெரிந்திருக்க வேண்டும் !!!)

2. குழந்தைகள் எளிதில் பாடல்களை மனனம் செய்து விடுகிறார்கள். ஆகையால், அவர்களுக்கு சிவபுராணம் முதலிய திருமுறை பாடல்களை, புத்தகங்களை படிக்க கொடுத்து, தினமும் காலையில் சில பதிகங்கள் ஓதி, தோப்புக்கரணம் போட்டு பூசை செய்ய சொல்ல வேண்டும். இதற்கு 10 நிமிடங்கள் முதல் 30 நிமிடம் வரை தான் ஆகும். ஆனால், இது மிக முக்கியமானது.

3. சமயகல்வி மிகவும் இன்றியமையாதது. சைவப் பாடம் என்ற பாடம் முன்பு நம் பாடசாலைகளில் கற்பிக்கப் பட்டு வந்தது. தற்போது பெற்றோர்கள் தாம் தம் குழந்தைகளுக்கு போதிய சமயகல்வி கொடுப்பது இன்றியமையாததாகிறது. பன்னிரு திருமுறை, சமய குரவர்கள், நம் சின்னங்கள், 63 நாயன்மார்கள் வரலாறு, நம் சமய நூல்கள் எவை, சமய சின்னங்கள் எவை போன்ற அடிப்படை கல்வி அனைவருக்கும் அவசியம். ஒவ்வொரு வாரமும் குறைந்தது 2-4 மணி நேரம் சமயகல்வி வகுப்புக்கு அனுப்புவது மிக மிக அவசியம்.

4. திருவிளையாடல், திருவருட்செல்வர், அகத்தியர், ராஜராஜ சோழன், பட்டினத்தார், ஔவையார், காரைக்கால் அம்மையார், நந்தனார், கந்தன் கருணை, சரஸ்வதி சபதம், சம்பூர்ண ராமாயணம் போன்ற எண்ணற்ற அருமையான சினிமா படங்கள் உள்ளன. அவ்வப்போது குழந்தைகளோடு சேர்ந்து நீங்களும் அவர்களுக்கு அந்த கதைகளை பற்றி உரையாடிக் கொண்டே பாருங்கள்.

5. தமிழிலும் ஆங்கிலத்திலும் தனித்தனியாக உரையாட கற்றுக்கொடுங்கள். தமிழில் ஆங்கிலத்தை கலப்பது வேண்டவே வேண்டாம். ஆங்கிலம் கலக்காமல் தமிழ் நன்றாக தெரிந்து பேச வேண்டும். இரண்டையும் கலந்து பேசுவது கூடாது.

6. சுற்றுலாக்களுக்கு செல்லும் போதும், மற்ற விடுமுறை நாட்களின் போதும், திருவண்ணாமலை, சிதம்பரம், சீர்காழி, மதுரை, திருநெல்வேலி, அவிநாசி, திருவொற்றியூர், திருவான்மியூர், மயிலை, திருவாலங்காடு, குமரனின் 6 படை வீடுகள் என்று எண்ணற்ற தலங்கள் உள்ளன. அவ்வாறான புகழ்பெற்ற தலங்களுக்கு அழைத்து சென்று அதனோடு தொடர்புடைய புராண வரலாறுகளையும் தலவரலாறுகளையும் அவர்களுக்கு எடுத்து கூறுங்கள்.

7. உங்கள் குழந்தைகள் புறசமயத்தினர் பள்ளிகளில் படிக்கும் போதோ, புறச்சமய நண்பர்களுடன் பழகும் போதும், அவர்களோடு எவ்வாறு பழக வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பதை தேவையுள்ளவர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

8. முடிந்த மட்டில் கிறிஸ்தவ / முஸ்லிம் பள்ளி கல்லூரிகளில் குழந்தைகளை சேர்க்காதீர்கள். பெரும்பாலானவர்களின் குறிக்கோளே, கல்வி மூலம் மதமாற்றம் செய்வது.  வேறு வழியின்றி அவ்வாறு சேர்க்கும் நிலை ஏற்பட்டால், நம் சமய வழிமுறைகளை வலுவாக தினமும் பின்பற்றக் கூறி, கடைப்பிடிக்கவும் வேண்டுமாறு செய்திடுங்கள்.

திருச்சிற்றம்பலம்.

 

நாரை சொல்லும் செய்தி


திருச்சிற்றம்பலம்.

திருஆலவாய் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் பொற்றாமரை குளத்திற்கு வந்த நாரை 4 நாட்கள் உண்ணா நோன்பிருந்து இறைவன் திருவடியை சேர்ந்தது. இந்த நிகழ்வு கூறுவது யாது ?

1. அனைத்து உயிர்களுக்கும் இறைவனை உணரும் திறன் உள்ளது. அந்த ஈசன் எல்லா உயிர்க்கும் இயல்பானவன். அவன் தான் நம் தலைவன் என்பது உணர்த்தப்படுகிறது.

பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ!
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசன்அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ


என்ற மாணிக்கவாசகரின் திருச்சாழல் பாடல் வரிகளை உணர்த்துகிறது.

2. இன்றைய பல சமயங்கள் கூறுவது போல, இறைவன் ஆணோ, பெண்ணோ, அலியோ அல்ல. அவன் பாலுக்கும், எவ்வுயிர்க்கும் அப்பாற்பட்ட பரம்பொருள். அந்த பரம்பொருளாகிய சிவம் அருட்பெரும் சோதியாக தன்னை வெளிப்படுத்தும். அந்த சிவத்தை எல்லா உயிரும் தொழும்.

3. உண்ணா நோன்பும் இறை உணர்வும் எல்லா உயிரினங்களும் அறிந்து கடைப்பிடிக்கும் ஒன்று என்பது புலனாகிறது.

4. அதிசயங்கள் எக்காலத்திலும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. சிவனடியார்கள் எக்காலத்தும் இருப்பர். சிவனடியார்கள் எந்த வடிவிலும் இருப்பர். நாம் இதை நம் அகக் கண்களை திறந்து அறிந்து உணர வேண்டும்.

5. நம் புராணங்கள் வெறும் கதை அல்ல. அவை வரலாற்று நிஜம். அவை மீண்டும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.
பிறப்பு இறப்பு முதலும் முடிவும் இல்லாத அநாதியான பரம்பொருளை உணர்ந்து, நம் இல்லத்திற்கு அழைத்து தினம் திருமுறை பாடல்களால் ஏத்தி தினம் தொழுவோம். அதுவே நாம் அனைவரும் பெற்ற புண்ணியமும், நம் பிறவியின் குறிக்கோளும் ஆகும்.

திருமுறை ஓதுவோம். திருமுறை ஓதுவிப்போம்.
திருச்சிற்றம்பலம்.

மனிதநேயப் பரிவு

 
சைவம் மனித நேயத்தை வற்புறுத்தும் ஓர் அன்பு நெறி. சிற்றுயிர்கள் இடத்தும் கருணை காட்டவேண்டும் என்று அது வற்புறுத்துகின்றது. இறைவன் உலகத்தையும், நுகர் பொருள்களையும் உயிர்கள் பெற்று இன்புறுவதற்கே படைத்தளித்தான். உயிர்களிடமிருந்து இறைவன் அன்பு ஒன்றைத் தவிர வேறு யாது ஒன்றும் பெற விரும்புவதில்லை. ஆனால் சமயவாதிகள், சடங்கு நெறியில் பற்றுக் கொண்டு நின்று, மனிதனின் பசிக்கு உணவிட விரும்பாது இறைவனுக்குப் படையலிட்டு மகிழ்கின்றனர். இறைவன் மனிதன் அளிக்கும் உணவையும், படையலையும் உண்டு மகிழ்கின்றானா என்றால் இல்லை. இறைவன் கவனத்திலும் கணக்கிலும் அவனுக்குப் படைக்கப்படும் படையல் இடம் பெறுவதில்லை. அவன் கணக்கில் இடம்பெற விரும்பினால் பசித்திருப்போருக்கு உணவு அளியுங்கள். அதுவே அவனைச் சென்றடையும் அரிய பெருநெறி என்று காட்டுகிறார் திருமூலர்.

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே

(திருமந்திரம் : -1857)

(படமாடக் கோயில் = இறைவன் உருவத்தை ஓவியமாக எழுதி வைத்துள்ள இடம், பகவன் = இறைவன், நடமாடக் கோயில் நம்பர் = நடமாடும் கோயிலாகிய மனிதர்கள், ஆமே = போய்ச் சேரும்)
அது என்ன ‘நம்பர்க்கு’ என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழுகிறது; ‘நம்பர்’ என்ற சொல் ‘நம்மவர், எம்மைப்போன்ற மனிதர்கள்’ என்ற பொருள் தரும். மனிதரின் உள்ளத்தில் இறைவன் குடி கொண்டுள்ளான். எனவே மனிதர்கள் இறைவனின் நடமாடும் கோயில்கள், நடமாடும் கோயில்களாகிய நம் போன்ற மனிதர்க்கு ஒன்று கொடுப்பது இறைவனுக்குக் கொடுப்பதற்கு ஒப்பாகும்.

திருமுறை அறிவோம். திருமுறை அறிவிப்போம்.
திருச்சிற்றம்பலம்.

மரமும் யானையும்

உலகம் வேறு, இறைவன் வேறானவன் என்று கருதும் கருத்து சமய நம்பிக்கை உடையவர்களிடமும் உள்ளது. குழந்தை மரத்தால் செய்யப்பட்ட யானை பொம்மையைக் கண்டு ‘யானை! யானை’ என்று அஞ்சித் தாயிடம் தஞ்சம் அடைகிறது. தாயோ இது யானை இல்லை மரம் என்று கூறிக் குழந்தையின் அச்சம் நீக்குகிறாள் என்றால் குழந்தை கண்டது யானையா? மரமா? என்ற ஐயம் எழுகிறது. யானையாகக் கண்ட குழந்தைக்கு மரம் என்பது புலப்படவில்லை; மரம் என்ற தெளிவு பெற்ற தாய்க்கு யானை புலப்படவில்லை. இவற்றைப் போல் உலகத்தையும், உலகப் பொருள்களையும் இறைவனாகவே காண்பார்க்கு அவை புலப்படுவதில்லை. உலகமாகவே காண்பார்க்கு இறைமை புலனாவதில்லை. இவ்வழகிய உண்மையைத் திருமந்திரம் மிக அழகிய கவிதை ஒன்றில் வைத்து விளக்குகிறது.

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே

(திருமந்திரம் : -2290)

இக்கருத்தையொட்டியே நாயைக்கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்ற பழமொழி எழுந்தது. எளிய இனிய எடுத்துக்காட்டுகளால் அமைந்துள்ள இத்தகு கவிதைகள் திருமந்திரத்தில் நிறைவாக இடம் பெற்றுள்ளன.
திருமுறை அறிவோம். திருமுறை அறிவிப்போம்.

திருச்சிற்றம்பலம்.

 

வாழ்கவே வாழ்க என் நந்தி திருவடி


நந்தி என்பது சிவபெருமானின் பெயர். அந்த நந்தியே நமக்கு குருவாகவும் இருந்து வழிகாட்டுகிறார். உயிர்களாகிய ஆன்மாக்கள் முப்பெரும் மலமாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றுடன் ஒட்டியே உள்ளன. நெல்லும் உமியும் போல. மலங்களோடு உழல்வதால், இறைவனை மறந்து சிற்றின்பங்களில் திளைத்து திரிகின்றன. இதனால் மீண்டும் மீண்டும் பிறக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த மலத்தை நீக்கினால், இறைவன் திருவருளைப் பெறலாம். இந்த மலத்தை நீக்குவதற்கே இறைவன் திருவருள் வேண்டும். அதை அவ்வுயிர்கள் வேண்டி நிற்க வேண்டும். அவ்வாறு அந்த மலத்தை அறுத்து ஞானத்தை அளிக்க வல்லது அந்த சிவம் ஒன்றே. ஆகவே, அந்த மலங்களை அறுக்க வல்லவன் திருப்பாதம் வாழ்க என்கிறார் திருமூலர். மலமறுத்து நலமுற மன்னுவித்தது திருவடியுணர்வு. அதனால் மெய்ஞ்ஞானத்தவன்தாள் வாழ்க என்றனர். அவன் இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவனாதலின் மலமிலான் பாதம் வாழ்க என்று ஓதியருளினர். திருவடி, பதம், தாள், பாதம் நான்கும் ஒருபுடையொப்பாக நன்னெறிநான்மை நற்றவப்பேற்றினைக் குறிக்கும். இதனை, 'சீலமடி நோன்புபதம் தாள்செறிவு பாதமே, ஏலுமறி வாமால் இசை' என நினைவுகூர்க. இதன்கண் காணப்படும் வாழ்த்து எட்டினாலும் சிவபெருமானின் வான்குணம் எட்டும் குறிப்பாகக் குறிக்கப்படும் தனித் தமிழ் மாண்பின் இனித்த மாறா வனப்போர்க. இதனை, 'வாழ்த்தெட்டால் வள்ளல் சிவபெருமான் எண்குணமும், வாழ்த்து தமிழ் தாடலைவாழ் மாண்பு' என நினைவுகூர்க.

வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.
    : திருமூலர்.

திருச்சிற்றம்பலம்.


திருச்சிற்றம்பலம்.

REST IN PEACE  RIP  - இதை தமிழர்கள், சைவர்கள் பயன்படுத்தலாமா ?


உலகமயமாக்கல் என்ற புயலில், அனைத்து நாட்டினரும், தங்கள் பண்பாடு, மொழி சிதையாத வண்ணம் பாதுகாத்து வருகின்றனர். ஆனால், இந்தியர்களோ, இதற்கு நேர் எதிர்முகமாக செயல்படுகின்றனர். மேற்கத்தியவர்கள் நம்மை அடியமைக்காக, நம்மை இழிவு படுத்தி, எப்போதும் தாழ்மைப் படுத்தியே வந்தனர். அந்த தாக்கம் இன்னும் நம்மிடம் இருந்து விலகவேயில்லை. மேற்கத்திய மோகம் நம்மை இன்னும் படாத பாடு படுத்துகிறது. மேற்கிலிருந்து எதை எடுத்துக் கொள்ளும் போதும், நம் சொந்த அறிவை பயன்படுத்தி, அதன் பொருளை உணர்ந்து, சரியானவற்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். அவன் சொல்கிறானே என்பதற்காக, நாமும் அப்படியே சொல்லக்கூடாது. நம் அறிவையும் சிறிதே பயன்படுத்த வேண்டும். அதற்கு ஒரு சின்ன உதாரணம் தான் REST IN PEACE aka RIP.
யாராவது இறந்து விட்டால், அவர்கள் ஆத்மா சாந்தியடையட்டும் என்கிற அர்த்தத்தில் RIP  பயன்படுத்த படுகிறது. கிறிஸ்தவ நம்பிக்கைகளின் படி இது அமைந்துள்ளது. கிறிஸ்தவ நம்பிக்கையின் படி, இறந்த பின் ஒருவர் அவர் கல்லறையிலேயே நிரந்தரமாக தங்கிவிடுவதாக நம்பப்படுகிறது. அவர்களுக்கு மறுபிறப்பும், பிறவிச் சுழல் பற்றியும் தெரியாது. நம் சமய கோட்பாடுகளின் படி, ஒருவர் இறந்த பின்னர், அவரின் வினைகளுக்கு ஏற்ப அடுத்த பிறப்பை எடுப்பார். 1930 ல் டெல்லியில் பிறந்த சாந்தி தேவி என்ற பெண் தன்னுடைய முன்ஜென்ம ஞாபகங்களை அப்படியே சொல்ல, காந்தியடிகள் அதை குழு அமைத்து விசாரித்து, மறுபிறவி உண்டு என்பது நிரூபிக்கப்பட்டது. மறுபிறப்பு இல்லாத ஆன்மாக்கள் சிவபெருமான் திருவருளால் முக்தி நிலை அடையும். அவ்வாறு முக்தி நிலை அடைந்த ஆன்மாக்கள், சிவலோகம் சென்று, சாலோகம், சாமீபம், சாரூபம், மற்றும் சாயுச்சியம் என்ற ஏதாவது ஒரு நிலையில் முக்தி கொள்ளும். இறைவன் திருவுளம் கொண்டால் மீண்டும் பூமிக்கு வரும். முக்தி பெறாத ஆன்மாக்கள் மீண்டும் பிறந்து தன் வினை கணக்கை விட்ட இடத்தில் இருந்து துவங்கும். ஆகவே RIP என்பதில் எந்தவித உண்மையும் கிடையாது. அது தவறான கொள்கையாகும். இறந்தவர்களை நாம் நல்ல நிலைப்படுத்த நாம் உபயோகிக்க வேண்டியது, Bless With Mukthi (or Bless Mukthi With to make the acronym BMW - easy to remember). ஆகவே, RIP பதிலாக BMW பயன்படுத்துங்கள்.

திருச்சிற்றம்பலம்.

 

சித்திர சபை


திருச்சிற்றம்பலம்.

ஆதிகாலத்தில் திருக்குற்றாலநாதர் கோயில் ஒரு பெருமாள் கோயிலாக இருந்தது. அப்பொழுது, ஒரு சமயம் அகத்திய முனிவர் இந்தத் திருக்கோயிலுக்கு வந்தார். பார்க்க சிவப்பழமாக நெற்றி முழுவதும் விபூதி அலங்கரிக்க சிவனடியாராக அவர் உள்ளே நுழைய, அவரை வைணவர்கள் தடுத்து நிறுத்தி விட்டனர். ‘இனி என்ன செய்யலாம்’ என்று சிந்தித்தபடி அவர் வெளியே வந்தார். பின், ஒரு வைணவரைப் போல் கழுத்தில் துளசிமாலை அணிந்து, நெற்றியில் திருமண் தரித்துத் திரும்பவும் கோயிலுக்குள் நுழைந்தார். அப்போது உள்ளே இருந்த அர்ச்சகர்கள் ஓடி வந்து அவரை வரவேற்று அவரையே பூஜை செய்ய அனுமதியும் தந்தனர். "அட கோவிந்தா! நான் பூஜைக்குத் தேவையான பொருள் ஒன்றும் எடுத்து வரவில்லையே! தயவு செய்து நீங்கள் எனக்கு வாங்கி வரவேண்டும்" என்றார் அகத்தியர். பூசாரியும் சரி என்று சொல்லி அங்கிருந்து வெளியேறினார். இதுதான் தக்க சமயம் என்று அகஸ்தியர் கர்ப்பக்கிரகத்துள் நுழைந்தார். அங்கு நின்ற கோலத்தில் இருந்த பெருமாளைப் பார்த்தார். தன் கையிலிருந்த சில மூலிகைகளைக் கசக்கினார். பெருமாளைப் பார்த்து "குறுகுக! குறுகுக!" என்று கூறியபடியே மூலிகைகளைக் கசக்கி அவர் தலைமேல் பிழிந்தார். பின், தன் கட்டைவிரலால் அழுத்தினார். பெருமாள் குறுகிச் சிவலிங்கமாக ஆனார். இப்படி, அகஸ்தியர் அழுத்தியதால் ஏற்பட்ட வடுவைச் சிவலிங்கத்தின் மேல் இன்றும் காணமுடிகிறது.

பெருமாளின் தலையை அழுத்தி உருவாக்கிய திருமேனி என்பதால் சிவலிங்கத்திற்குத் தலைவலி வருமோ என பயந்து அவரது சிரசில் மூலிகைச்சாற்றினால் அபிஷேகம் செய்து பூஜை செய்கிறார்கள். பின், இந்தத் தைலத்தைப் பிரசாதமாகத் தருகிறார்கள். இறைவன் மேனி இங்கு குறுகிப்போனதால் ‘திருக்குற்றால நாதர்’ என்ற பெயரில் அருள்புரிகிறார் என்பது வரலாறு. பஞ்ச சபைகளில் இது ‘சித்திர சபை’யாகப் போற்றப்படுகிறது.
திரிகூடமலை, ஞானபுரி, வேடன் வலம் வந்த ஊர், தேவகூடபுரம் என்று இந்த இடத்திற்குப் பல பெயர்கள் உண்டு.

இக்கோயிலில் அருள் புரியும் குற்றாலநாதரின் இடப்புறத்தில் அம்பாள் ஞான சக்தியாக அருள்புரிகிறாள் சக்தி பீடமே சக்தியாக இங்கு விளங்குவது மிகவும் விசேஷம்தான்! இந்தக் கோயில் மஹாபாரதத்துடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது. அர்ச்சுனன் சிவபெருமானிடம் பாசுபத அஸ்திரம் பெறக் கடுந்தவம் இயற்றினான். இதனால் அவன் வெற்றி பெற்று விடுவானோ என்று பயந்து அதைக் கலைக்க மூகன் என்ற அசுரனை துரியோதனன் அனுப்பி வைத்தான். அர்ச்சுனன் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவனது தவம் கலையாமல் இருக்க ஒரு வேடன் போல் வந்து மூகனை அழித்தார். ஆனாலும், தவம் கலையவே, வேடனைப் பார்த்த அருச்சுனன் தன் தவம் கலைந்தது குறித்து வேடனுடன் வாதிட்டான். பாதியில் வேடன் மறைந்து விடவே, வந்தது பரமேஸ்வரனே என்பதை உணர்ந்தான். மீண்டும் இறைவனைக் காணத் துடித்தான். இறைவனுக்குப் பூஜை செய்வதற்காகத் தான் கொண்டு வந்திருந்த பெட்டியை எடுக்கச் சென்றால், அங்கு அதைக் காணவில்லை.

‘இது என்ன? பூஜைப் பெட்டியைக் காணவில்லையே! இது என்ன அபசகுனம்? இனி இந்த உயிர் இருந்து என்ன பிரயோசனம்’ என்றெண்ணி உயிரை விடத் துணிந்தான். அதற்கு மேலும் அவனைச் சோதிக்க மனமில்லாத சிவபெருமான் "அருச்சுனா! உன் சிவபக்திக்கு மெச்சினேன். நீ நேரே திரிகூடமலை செல்! அங்கு பூஜைப்பெட்டியைப் பெறுவாய்!" என்று கூறி, பாசுபதத்தையும் அளித்து ஆசி வழங்கினார்.

இது நடந்த நாள் பங்குனி உத்திரம் ஆகையால் இக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா மிகச் சிறப்பாக நடக்கிறது. இங்கிருக்கும் பீடம் மிக சக்தி வாய்ந்தது. இதைக் கையால் தொழுதாலே சகல பாபங்களும் விலகும்.
தென்காசி தொடர்வண்டி நிலையத்திலிருந்து ஐந்து கி.மீ சென்றால் இந்த இடத்தை அடையலாம். இங்கு நிறையக் குறவர் குடும்பங்களைக் காணலாம். பலவித மணிகள், ஊசிகள், பாசிமணி என்று நம்மை விடாமல் துரத்தி வியாபாரம் செய்துவிடுவார்கள்.

திருநெல்வேலி வரை செல்பவர்கள். திருக்குற்றாலநாதரையும் கண்ணாரக் கண்டு அவரது ஆசி பெற்று வாருங்கள்!
உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்;
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!
 -- மாணிக்கவாசகர், திருப்புலம்பல்.

யார் ஒருவர் இறக்கும் தருவாயில் திருக்குற்றால நந்தீஸ்வர மூர்த்தியைத் தியானித்து அப்பர் பெருமானின் மரண பயம் நீக்கும் ம்ருத்யுஞ்ஜய துதியான,

’உற்றார் யார் உளரோ உயிர் கொண்டு போம்பொழுது

குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்கு உற்றார் யாருளரோ’

என்ற துதியை ஒருமுறையாவது ஓதுகின்றார்களோ அவர்களுடைய வேண்டுகோளை எம்பெருமான் மனமுவந்து ஏற்பதால் அதுவே அவர்கள் இப்புவியில் ஏற்கும் கடைசி பிறப்பாக அமையும் என்பது உறுதி.
திருமுறை அறிவோம். திருமுறை அறிவிப்போம்.

ஞாயிறு, 20 மார்ச், 2016

சைவ சமயம் - அனைவரும் அறிய வேண்டிய அடிப்படை சைவ செய்திகள்

அடிப்படை சைவம்


தெருவை சுத்தம் செய்யும் தொழிலாளி முதல் கைபேசி சேவை செய்யும் தொழிலாளியும் சேர்த்து பெரும் கட்டடங்களை காவல் காக்கும் காவலாளி வரை யாவரும் சைவத்தை பற்றிய அடிப்படை செய்திகளை அறிய வேண்டும். சமய கல்வி இன்றியமையாதது. அதை கெடுத்ததாலே இன்று நம் சமுதாயம் அயல் நாட்டு அஞ்ஞானத்தால் சீரழிகிறது.

அந்த நிலையை மாற்றி, மெய்ஞானத்தை பரப்ப, நாம் நிறைய தூரம் பயணம் செய்ய வேண்டும். அதற்கு நாம் அனைவருக்கும் எளிமையாக புரியும் வகையில் சைவ கருத்துக்களையும் ஞானத்திரளையும் எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு ஒரு சிறு முயற்சியே இந்த சைவ சமயம் அடிப்படை நுட்பம். 10 ஏ நிமிடத்தில் படித்து முடிக்கக்கூடிய, வெறும் இரண்டு  A4 தாளில் அடக்கி அச்சிட்டு யாவருக்கும் கொடுக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.



சிவமயம்
நமப் பார்வதி பதையே அரகர மகாதேவா

திருச்சிற்றம்பலம்.

தென்னாடுடைய சிவனே போற்றி ! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி ! பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி !
அண்ணாமலை எம் அண்ணா போற்றி ! கண்ணாரமுதக் கடலே போற்றி !
காவாய் கனக திரளே போற்றி ! கயிலை மலையானே போற்றி போற்றி !








திருச்சிற்றம்பலம்.

சைவ சமயம்
அடிப்படை நுட்பம்

சைவத்தின் மேல் சமயம் வேறில்லை அதில்சார் சிவமாம்
தெய்வத்தின்மேல் தெய்வம்இல்லெனும் நான்மறைச் செம்பொருள்
வாய்மை வைத்த சீர்திருத் தேவாரமும் திருவாசகமும்
                                                                                                    உய்வைத் தரச்செய்த
நால்வர் பொற்றாள் எம்உயிர்த்துணையே.


ஸ்ரீ சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீசுவரர் திருக்கோவில்
பள்ளிக்கரணை, சென்னை
பள்ளிக்கரணை சிவனடியார் திருக்கூட்டம்


சைவ சமயம் – அடிப்படை நுட்பம்

 


1.        அடிப்படை நுட்பம்      2. சைவநெறி நூல்கள்

3.    சைவ சின்னங்கள்      4. சமயக் குரவர்கள்

5.    சைவர்கள் அறிய வேண்டிய பிற செய்திகள்

1.    அடிப்படை நுட்பம்


  
இறைவன் ஒருவனே. தொன்மையான நம் சைவ சமயத்தில் இது மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அந்த இறைவன், மங்கலமானவர், மலங்கள் (குற்றங்கள்) அற்றவர், ஆகையால், செம்மையான பொருளான அவருக்கு நாம் சிவன் என்று பெயர் சூட்டியுள்ளோம். அவர் என்றும் உள்ளவர். அவர் எல்லையற்ற சக்தியாகிய ஆற்றலை உடையவர். அவருடைய சக்தியை ஒரு பெண்ணாக உருவகித்து நாம் சக்தி என்கிறோம். சக்தி என்பது சிவத்திற்குள்ளேயே அடங்கி இருப்பது. இதுவே மாதொருபாகன் திருவுருவ விளக்கம். இறைவன் பிறப்பு, இறப்பு, பந்தம், பாசம், அன்பு, உறவு, நீளம், அகலம், காலம், மொழி என்று எவற்றையும் கடந்தவர். பந்தமும் பாசமும் அற்றவருக்கு குடும்பமும், குழந்தைகளும் ஏது ? அறத்தை நிலைநாட்டும் பொருட்டு, அவரிடமிருந்து தோன்றிய சக்திகளை நாம் அவர் குழந்தைகளாக பாவித்து, விநாயகர், பைரவர், வீரபத்திரர், முருகர் என்று பெயரிட்டு, நமக்கு புரியும் குடும்ப முறையில் பாவித்து வணங்குகிறோம்.

நம் தலைவனாகிய சிவபெருமான் ஐந்து தொழில்களை மேற்கொள்கிறார். முறையே, ஆக்கல், காத்தல், ஒடுக்குதல்(அழித்தல்), மறைத்தல், அருளல். இந்த ஐந்து தொழில்களையும் பல்வேறு கரணங்களை பயன்படுத்தி செய்கிறார். ஆக்கலுக்கு பிரம்மனையும், காத்தலுக்கு விஷ்ணுவையும், ஒடுக்குதலுக்கு உருத்திரனையும், மறைத்தல், அருளலை (சக்தி) தானே முன்னின்றும் செய்கிறார். சிவபெருமானைத் தவிர மற்ற யாவும் அவருக்குக் கருவிகளே.

நாம் வாழும் இந்த அண்டத்தைத் தீர ஆராய்ந்து பார்த்தால், மூன்று பொருட்கள் இருப்பது புரியும். இறைவன், நம் போன்ற உயிர்கள், மற்றும் அண்டப் பொருட்களை உள்ளடக்கிய பாசம். நம் போன்ற உயிர்கள் பிறந்து, இறந்து மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் தன்மையுடையது. இதுவே பிறவிச் சுழல் எனப்படும். இந்தத் துன்பச் சுழலில் இருந்து விடுபட்டு முக்தியடைய வேண்டுமானால், அவை அந்த சிவபெருமானை வணங்குவதால் மட்டுமே கைகூடும். அதுவே முக்தி. ஆனால், உயிர்களை சிவபெருமானோடு அண்ட விடாமல் தடுப்பது, இந்த உலகில் உள்ள சடப்பொருட்களாகிய பாசம். சில உதாரணங்கள்: ஆணவம், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை. சைவ சித்தாந்தத்தம், இறைவனை பதி என்றும், உயிர்களை பசு(ஆன்மா) என்றும், மற்ற பந்த பாசத்தை, பாசம் என்றும் கூறுகிறது. இதுவே முப்பொருள் உண்மையாகும். திருமந்திரத்தில் வரும் இந்த செய்யுளைக் கவனியுங்கள்:

     பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
     பதியினைப் போல் பசு பாசம் அனாதி
     பதியினைச் சென்று அணுகாப் பசு பாசம்
     பதி அணுகில் பசு பாசம் நில்லாவே. – திருமந்திரம்

இறைவன் அனாதியாய் இருப்பவர். அவரைப் போலவே, உயிர்களும், பாசமும் அனாதியாய் இருப்பவை. உயிர்களையும், பாசத்தையும் சிவபெருமான் படைக்கவில்லை. சிவபெருமான் என்று உண்டோ, அன்றிலிருந்தே, இந்த உயிர்களும், பாசமும் உள்ளவை. பிறவிச் சுழலில் உழலும் உயிர்கட்கு, சிவபெருமான் ஒருவரே முக்தி அளிக்கும் வல்லமை பெற்றவர். வேறு எவருக்கும் அந்த வல்லமை கிடையாது. ஆகவே, உயிர்களாகிய நாம், நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த உடலாகிய கருவியைக் கொண்டு சிவபெருமானைத் தொழுது அவர் திருவடி சேர வேண்டும். பல பிறவிகளில் சிவ புண்ணியம் செய்தால் மட்டுமே, சிவபெருமானை உணர்ந்து அவரைத் தேடித் தொழுது, அவரின் அருள் பெற்று திருவடிப் பேறு கிட்டும். மற்றவர்கள் சிவ புண்ணியங்கள் செய்யும் வரை பிறவிச் சுழலில் உழன்று கொண்டே இருப்பர். சிவபெருமானின் ஐந்து தொழில்களை செய்ய உதவி கரணமாக இருக்கும் மற்றபிற தேவர்களையும், பிரம்மன், விஷ்ணு, போன்ற தேவர்களை வணங்கினாலும், முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை வணங்கினால் மட்டுமே திருவருளும் முக்தியும் கிட்டும். ஆகவே, சிறுதெய்வ வழிபாட்டில் நம் பொன்னான காலத்தை வீணடிக்காமல், முழுமுதற் கடவுளாகிய பிறப்பும் இறப்பும் ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமானை வணங்குங்கள் என்று நம் சமயாச்சாரியார்கள் அறுதியிட்டுக் கூறுகிறார்கள். ஓம் நமசிவாய.


சிவபெருமான், நம் மீது பெருங்கருணை கொண்டு அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளில் தன்னை உயிர்களுக்கு உணர்த்தி அருள் புரிகிறார். கண்களால் காண முடியாத பொருளாக, உணர மட்டுமே முடியும் நிலையில் அருவமாகவும் (சிதம்பரம்), நீண்ட சடை கொண்டு, பிறை, கங்கையைத் தலையில் தரித்து பல்வேறு மூர்த்தங்களாய் நாம் கண்களால் கண்டு மகிழ்ந்து வணங்கும் உருவமாகவும், சிவலிங்கமாக சதாசிவ மூர்த்தியாக அருவுருவ நிலையில் தன்னை உணர்த்தி உயிர்களுக்கு அருள் புரிகிறார்.

உயிர்கள் தங்களோடு இணைந்தே இருக்கும் மலத்தை நீக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்கு, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று நான்கு படிமுறைகள் உள்ளன. உயிர்களாகிய ஆன்மாக்கள், இறைவனது உருவத் திருமேனிகளைத் தமக்கு புறத்தே வணங்கிச் சிவாலயத்திற்கும் சிவனடியார்களுக்கும் திருத்தொண்டு செய்தல் சரியை வழிபாடு ஆகும். சிவாலயத்தில் திருவலகிடுதல், திருநந்தவனம் அமைத்தல், சிவனடியார்களுக்குரிய பணிகளைச் செய்தல் ஆகியன சரியையாகும். இறைவனது அருவுருவத் திருமேனியை (சதாசிவனை - சிவலிங்கத்தை) அகத்தும் புறத்தும் பூசித்தல் கிரியை வழிபாடு ஆகும். சிவபெருமானை அகத்தே பூசித்தல் யோக வழிபாடாகும். அது மனத்தை விடயங்களின் வழியே போகாவண்ணம் நிறுத்திச் சிவத்தை தியானித்து, பின்பு தியானிப்போனாகிய தானும் தியானமும் தோன்றாமல், தியானப் பொருளாகிய சிவன் ஒன்று மாத்திரமே விளங்கப்பெற்று சமாதி நிலை அடைதலாகும். பதி பசு பாசம் என்னும் முப்பொருள் உண்மையை அறிவிக்கும் ஞான நூல்களைக் கேட்டு சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடுதல் ஞானத்தில் ஞான வழிபாடு எனப்படும். இந்த நான்கு வழிகளும் சிவபெருமானை எளிதாக அடைய நமக்கு வழிகாட்டுபவை.

2. சைவநெறி நூல்கள்


வேதங்களும், சிவாகமங்களும், புராணங்களும் சைவத்தின் தொன்மையைப் பறைசாற்றுவன. வேதங்கள் நான்கு: ரிக், யசூர், சாமம், அதர்வனம். வேதங்கள் உலகிற்கு பொதுவான அறங்களைச் சொல்வது. இது அருநெறிய மறை எனப்படும். சைவத்திற்கு சிறப்பு சேர்ப்பது சிவ ஆகமங்கள். இவை மொத்தம் 28. சிவ ஆகமம் சத்திநிபாதத்திற்குரிய நுட்பத்தைச் சொல்வது. இது பெருநெறி எனப்படும். இவை வடமொழியில் உள்ளன. இவற்றின் கருத்துக்களையும் சைவ சித்தாந்தத்தையும் தமிழில் பல்வேறு நூல்கள் தாங்கியுள்ளன. தமிழின் தோத்திர நூல்களாக பன்னிரு திருமுறைகளும், சாத்திர நூல்களாக 14 நூல்களும் உள்ளன. திருக்கோவில்களிலும், வீட்டிலும் திருமுறை பதிகங்களை தினமும் ஓத வேண்டும். இவை நமக்கு நன்மையை பெருக்கி, அல்லவற்றை விலகச் செய்யும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். திருமுறையே வாழ்வின் நெறிமுறை. திருமுறை அறிவோம். குழந்தைகளுக்கு திருமுறை பாடல்களும், சைவ சமய நெறியை அறிவிப்பதும் பெற்றோர்களின் மிக முக்கியமான கடமை. நம் நூல்கள் யாவும் காலத்தை வென்றவை. எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும் இன்றும், என்றும் ஒரு சிறு எழுத்து பிறழாமல் உண்மை உரைப்பவை. உலகில் வேறு எதற்கும் இந்த அருள் கிடையாது. இது இறைவனின் அருளால் மட்டும் கூடும்.

3. சைவ சின்னங்கள்


திருநீறும், உருத்திராக்கமும், பஞ்சாக்கர மந்திரமும் (நமசிவாய, சிவாயநம, சிவசிவ மந்திரம்) முக்கியமான சைவ சமய சின்னமாகும். தீமைகளினின்றும் நம்மை பாதுகாத்து இறைவனின் பெரும் கருணையை நினைவூட்டும் சின்னங்கள் இவை. குற்றமற்ற பசுவின் சாணத்தை நெருப்பினாலே சுடுவதனால் உண்டாகும் நீறே தூய திருநீறாகும். வெண்மை நிறத் திருநீறே அணியத்தக்கது. சமய தீட்சை பெற்றோர் மாத்திரமே திருநீற்றை நீரில் கரைத்து திரிபுண்டரமாக அணியும் தகுதியுடையோர். மற்றோர் நீரில் கலவாது பொடியாக அணிதல் வேண்டும். திருநீற்றை மூன்று கோடுகளாக, இரண்டு கடைப்புருவ எல்லை வரை அணிய வேண்டும். ஒவ்வொரு கோட்டிற்கும் இடையே ஒவ்வொரு அங்குல இடைவெளி வேண்டும். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களை நீக்கும் என்ற குறிப்பு தோன்ற தரிப்பதே, மூன்று கோடுகளினால் திருநீறு அணிவதாகும். தலை, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் 16 இடங்களில் அணியலாம். திருநீற்றை வடக்கு முகமாகவோ, கிழக்கு முகமாகவோ தரித்தல் வேண்டும். தரிக்கும் போது, சிவபெருமானை சிந்தையில் வைத்து திருநீறு நிலத்தில் சிந்தாத வண்ணம் நெற்றியை மேலே தூக்கி “சிவசிவ”, “நமசிவாய” என்ற பஞ்சாக்கர மந்திரத்தை ஓதி அணிய வேண்டும். தூங்கி எழுந்த உடனும், தூங்குவதற்கு முன்னும், நீராடியவுடனும், பூசைக்கு முன்னும் பின்னும், உணவுக்கு முன்னும் பின்னும், கடமைகளைச் செய்யும் போதும், சிறப்பு நிகழ்ச்சிகளின் போதும் கட்டாயமாகத் திருநீறு அணிய வேண்டும். திருநீற்றை பட்டுப் பையிலோ, சம்புடத்திலோ மட்டும் வைக்க வேண்டும். குரு, சிவனடியார் திருநீறு கொடுத்தால், அவர்களை வணங்கி, அடக்கத்துடன் இரு கைகளையும் நீட்டி வாங்கிக் கொள்ள வேண்டும். திருநீற்றுக்கு மேலே குங்குமமேனும், சந்தனமேனும் அணியலாகாது. திருநீற்றுக்குக் கீழே, புருவ மத்தியில் குங்குமம் தரிக்கலாம். திருநீற்றை ஊதுவதோ, கோவில் தூண்களிலோ, வேறு இடங்களில் கொட்டுவதோ, கீழே சிந்துவதோ, கூடவே கூடாது.


உருத்திராக்கம் என்பது உருத்திரனது கண் எனப் பொருள்படும். திரிபுரத்து அசுரர்களாலே தமக்கு ஏற்பட்ட துன்பங்களை தேவர்கள் சிவபெருமானிடம் எடுத்துரைத்த போது, சிவபிரானது மூன்று கண்களில் இருந்தும் சிந்திய மணியே உருத்திராக்கமாகும். பத்தினிப் பெண்களுக்கு திருமாங்கல்யம் எத்தனை முக்கியமோ, அது போல சைவர்களுக்கு உருத்திராக்கம் அணிவது மிக முக்கியம். முறையாக உருத்திராக்கம் அணிந்து இறைவனிடம் அன்பு பூண்டார்க்கு உடல் நலமும், செல்வ வளமும், நெடு வாழ்வும், இன்ப வாழ்வும் இப்பிறப்பில் பெருகும். மறு உலகில் இறைவன் திருவடியினை எய்தி மாறா இன்பம் துய்த்து மகிழ்வர். உருத்திராக்கத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்து இருக்கலாம். தூங்கும் போதும், உண்ணும் போதும் எப்போதும் அணிந்திருக்கலாம். குழந்தைகள் முதல் பெண்கள், பெரியவர்கள் வரை, ஒரே ஒரு மணியாக, சிவப்பு கயிற்றில் கட்டி, கழுத்தில் தெரியும் படியாக எப்போதும் அணிந்திருக்க வேண்டும். கழற்றவே கூடாது. பெண்கள் எல்லா நேரங்களிலும் அணிந்திருக்கலாம். நீத்தார் கடன், பெண்கள் தீட்டு, கணவன்-மனைவி தாம்பத்ய நேரங்களிலும் கண்டிப்பாக அணியலாம். சிறுவர் சிறுமியர் அணியும் போது அவர்களின் படிப்புத்திறன் மேலோங்கும். பெண்கள் அணிந்திருக்கும் போது, தீர்க்க சுமங்கலியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றியும், இல்லத்தில் லட்சுமி கடாச்சமும் நிறைந்திருக்கும். ஆகையால், எல்லோரும் கண்டிப்பாக உருத்திராக்கம் அணிய வேண்டும். உருத்திராக்கம் அணிந்தால் தான் உடலும் உள்ளமும் தூய்மை அடையும். மருந்துக்குப் பத்தியம் எவ்வளவு அவசியமோ அது போல, உருத்திராக்கம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் ஆகியவற்றைப் படிப்படியாக விட்டுவிட முயற்சிக்க வேண்டும். (முக்கியமாக மாடு பன்றி மாமிசத்தை எப்போதும் சாப்பிடக்கூடாது.) உருத்திராக்க மாலையாக அணியும் போது, சந்தியாவந்தனம், சிவபூசை, செபம், தேவார திருவாசக பாராயணம், புராண படனம், சிவாலய தரிசனம் போன்ற நேரங்களில் மட்டும் தரிக்க வேண்டும். இது இல்வாழ்வில் இருப்பவர்களுக்கு பொருந்தும்.


சைவர்கள், நமசிவாய, சிவசிவ, சிவாயநம ஆகிய பஞ்சாக்கர மந்திரத்தை எப்போதும் உச்சரிக்க வேண்டும்.


4. சமய குரவர்கள், சந்தான குரவர்கள் 

 

7 ஆம் நூற்றாண்டில் சமண பௌத்த சமயங்கள் அரசர்களின் துணையோடு பரவிய போது, சைவ சமயத்தை இறைவன் திருவருளால் நிலை நிறுத்தியவர்களில் நால்வருக்கு முக்கிய பங்குண்டு. தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மற்றும் திருவாசகம், திருக்கோவையார் பாடிய மாணிக்கவாசகர் நால்வர்களே சமயக் குரவர் (குரு) எனப்படுவர். 3 வயதிலே சிவபெருமானின் திருவருளால் உமையம்மையின் திருமுலைப்பாலை உண்டு சிவஞானம் பெற்று பல அற்புதங்கள் செய்து 16 வயது வரை வாழ்ந்து சைவத்தை நிலைநாட்டியவர் திருஞானசம்பந்தர். சமண சமயத்தில் உழன்று, இறைவன் திருவருளால் சைவ சமயம் தழுவி, தேவாரம் பாடி 81 வயது வரை வாழ்ந்து முக்தியடைந்தவர் திருநாவுக்கரசர். இறைவனின் திருவுருவமே சுந்தரராக அவதரிக்கப் பெற்று 18 வயது வரை வாழ்ந்து பல்வேறு செயற்கரிய அற்புதங்களை செய்தவர் சுந்தரர். பாண்டிய நாட்டிலே சிவபெருமானால் தடுத்தாட்கொள்ளப்பட்டு திருவாசகம், திருக்கோவையார் பாடி தேனமுதத்தைத் தந்து 32 வயது வாழ்ந்தவர் மாணிக்கவாசகர். பின்னர் வந்த சந்தான குரவர்களான மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார் ஆகியவர்கள் நமக்கு சைவ சாத்திர நூல்களை அருளிய குருமார்கள். 63 நாயன்மார்களும் செயற்கரிய சிவதொண்டு புரிந்து நமக்கு வழிகாட்டியாக இருக்கும் குருமார்கள். இவர்களின் வரலாற்றை முழுவதுமாக படித்து, கேட்டு அறிந்து நம குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுப்பது நம் தலையாய கடமையாகும்.

5. சைவர்கள் அறிய வேண்டிய பிற செய்திகள் 

 

சைவத்தின் சிவஞானம் கடலை விட ஆழமானது. பின்வரும் கேள்விகளுக்கு பதிலைத் தேடுங்கள். வாழ்வு நல்திசையில் செல்லும். திருக்கோவிலின் கருவறை ஏன் இருட்டாக உள்ளது? சண்டிகேசுவரர் யார் ? அவர் முன் கை தட்டலாமா ? சிவனை எத்தனை முறை வலம் வரவேண்டும் ? கோவிலில் செய்யக்கூடியது எது, செய்யக்கூடாதவை எவை? சமய சந்தான குரவர்களின் வாழ்கை வரலாறு என்ன? பாடல் பெற்ற தலங்கள் 274, அவற்றின் தலவராறும் எவை? சிவபெருமானின் அட்டவீரட்ட செயல்களும் தலங்களும் எவை? உழவாரப்பணி ஏன் அனைவரும் செய்ய வேண்டும்? 63 நாயன்மார்கள் செய்த சிவ தொண்டுகள் எவை? மலபரிபாகம் என்றால் என்ன? தெய்வச் சேக்கிழார் பிறந்த ஊர் எது? அசபா நடனம் என்றால் என்ன? மாடக் கோவில் என்றால் என்ன? பஞ்சமம், புறநீர்மை என்றால் என்ன? வீரபத்திரர் யார்? பஞ்சகவ்யம், கேட்டுமுட்டு என்றால் என்ன? தீக்ஷை யார் பெறலாம்? குளத்து நீரை ஊற்றி விளக்கு எரித்த நாயன்மார் யார் ? திருமால் தவமிருந்து, சிவபெருமானிடம் சக்கராயுதம் பெற்ற திருத்தலம் எது ?

முற்றும்.

திருமுறை ஓதுவோம். திருமுறை ஓதுவிப்போம்.